விழியில் ஓவியமாய்க்,காதல் காவியமாய்க்
கனவில் வந்தாயே,கண்ணில் நின்றாயே!
உன் சலங்கை ஓசையிலே,என் சுவாசம் உரையவைத்தாய்
சிறு பார்வைச் சூட்டினிலே,என் இதயம் கரையவைத்தாய்!!
வாடைக் காற்றினிலே என் தேகம் எறியுதடி
தீயின் சூட்டினிலே சிறு குளிரும் தெரியுதடி
இதயத் துடிப்புகளும் உன் பெயர் படித்திடவே
இமையின் மறு புறத்தில் உன் பிம்பம் சிரிக்கிதடி!!
தாயைப் போலொரு கோயிலும் ஆனாய்
தந்தை சொல் மிக்க மந்திரம் சொன்னாய்
மந்திரமில்லா தந்திரம் செய்தாய்
ஏந்திரமாய் நான் ஆனதும் ஏனோ!!!
கண்கள் மூடவைத்தாய்! கவிதை பாடவைத்தாய்
கண்ணின் ஓரங்களில் கண்ணீர் கசிய வைத்தாய்
என்னை என்ன செய்தாய்?இன்னும் என்ன செய்வாய்?
பெண்ணே நீயுமென்னை உன்னில் மூழ்கடித்தாய்!!
என் இதயக் காட்டினிலே,நீ காதல் விதை விதைத்தாய்
உன் நினைவுச் சோலையிலே,நானும் அதை வளர்த்தேன்
காதல் மலர்களை நீ சூடிக்கொள்வாயா?
இல்லை அதன் மேலே ஏறிச் செல்வாயா??
பெண்ணின் ஆசை நீ! இசையில் ஓசை நீ!!
கண்ணில் பார்வை நீ! கவிதைக் கோர்வை நீ!!
உந்தன் முன்னாலே,என் இதயம் கண்ணாடி
சற்றும் விலகாதே விரிசல் விழுகிறதே!!!
-ராகவன்(த்வஜன்)
-ராகவன்(த்வஜன்)
No comments:
Post a Comment